மக்களவைத் தேர்தலின்போது பாமகவுடன் போட்ட ஒப்பந்தப்படி அன்புமணி ராமதாசுக்கு மாநிலங்களவை உறுப்பினர் வழங்க அதிமுக முடிவு செய்துள்ளது. அமைச்சர் ஜெயகுமார் இதனை அறிவித்தார்.

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலின் போது அதிமுக – பாமக கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவை சீட்டுகள் ஒதுக்கப்பட்டன. மேலும் 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தருவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது,

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆனால் மக்களவைத் தேர்தலில் பாமக வரலாறு காணாத படுதோல்வி அடைந்தது. இதனால் பாமகவுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஒரு இடம் ஒதுக்கப்படாது என அதிமுக வட்டாரங்களில் கூறப்பட்டது. இதையடுத்து அதிமுக அரசு மீது பாமக தொண்டர்கள் கடும்கோபத்தில் இருந்தனர்.

இந்நிலையில் வரும் 18 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளுக்கும் தலா மூன்று இடங்கள் கிடைக்கும். திமுக ஏற்கனவே மதிமுகவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி வைகோவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பாக தொமுச சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மாநிலங்களை தேர்தலில் பாமகவுக்கு உறுதி அளித்தபடி ஒரு இடம் வழங்கப்படும் என்றார்.இதனையடுத்து பாமக தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த அன்புமணி ராமதாஸ், அதிமுக தயவில் ராஜ்யசபா எம்.பி.யாகப் போகிறார்.