ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் ஆப்பு... கோர்ட் படியேறிய திமுகவிற்கு நீதிபதிகள் வைத்த குட்டு!
முதல்வர் பழனிசாமி பதவிபெற்றது குறித்து அவதூறாக விமர்சித்த திமுக எம்.பி. ஆ.ராசா பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்ததை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
முதல்வர் பழனிசாமி பதவிபெற்றது குறித்து அவதூறாக விமர்சித்த திமுக எம்.பி. ஆ.ராசா பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்ததை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
திமுக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திமுக எம்பி ஆ.ராசா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆயிரம் விளக்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பதவிபெற்றது மற்றும் தாயார் குறித்து அவதூறாக பேசியது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. ஆ.ராசாவின் பேச்சிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இரண்டு நாட்கள் கழித்து தனது பேச்சு குறித்து மன்னிப்பு கோரியிருந்தார்.
ஆ.ராசாவின் பேச்சு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக அளித்த புகாரின் பேரில், 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து, ஆ.ராசா தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் கடிதம் ஒன்றை அனுப்பி, வழக்கறிஞருடன் நேரில் ஆஜராக விளக்கம் அளிக்க கோரிக்கை வைத்திருந்தார்.
ராசாவின் விளக்கத்தை பரிசீலித்த தேர்தல் ஆணையம், ஆ.ராசா 48 மணிநேரத்திற்கு பிரச்சாரம் செய்யக் கூடாது என இன்று தடை விதித்து உத்தரவிட்டது. அதேசமயம், திமுகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலிலிருந்தும் ஆ.ராசா பெயரை நீக்கியும் உத்தரவிட்டிருந்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் அவசர முறையீடு செய்யப்பட்டது. ஆ.ராசா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தேர்தலுக்கு சில நாட்களே உள்ளதால் தற்போதைய நிலையில் பிரச்சாரத்திற்கு தடை விதித்துள்ளதாகவும், அதை எதிர்த்து தொடரவுள்ள வழக்கை அவசர வழக்காக நாளை விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.ஆனால் நீதிபதிகள் அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.