ரைடில் சிக்க போகும் அமைச்சர்கள் யார் யார்? கொத்து கொத்தாய் விசாரணை வளையத்தில் மாட்டும் எம்பி, எம்எல்ஏக்கள்
தவறு செய்பவர்களை கண்டு கொள்ளாமல் ஆடும் வரை ஆடட்டும் என்று சுதந்திரமாக விட்டு, பின் ஒரே நாளில் வசமாக சிக்க வைப்பது நமது காவல் துறையின் தந்திரம்.
அதே பார்முலாவை பின்பற்றி, தினகரன் மற்றும் அமைச்சர்களை மனம் போன போக்கில் செலவு செய்ய வைத்து, அதற்கான ஆதாரங்களை எல்லாம் திரட்டி ஒரே நாளில் அமைச்சர் விஜயபாஸ்கரை அமுக்கியது வருமானவரி துறை.
அவரிடம் மேற்கொண்ட சோதனையில், ஆர்.கே.நகர் தேர்தல் விவகாரம் மட்டுமன்றி, ஜெயலலிதா மரணம் குறித்த மர்மத்திற்கான கதவுகளும் திறந்திருப்பதில், மத்திய அரசுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.
இலவச இணைப்பாக, ஜெயலலிதாவின் கைரேகை டாக்டர் பாலாஜி, 5 லட்ச ரூபாய்க்கு சொன்ன செலவு கணக்கு விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுக்கு வலு சேர்த்துள்ளது.
மேலும், விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, டி.ஜெயக்குமார், வீரமணி ஆகியோரிடமும் வருமான வரித்துறை விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
அத்துடன், முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி அதிமுக நிர்வாகிகள், எம்.பிக்கள் என பட்டியலில் இருந்த அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.