நாஞ்சில் சம்பத்தை அதிமுகவுக்கு அழைக்கும் எம்.பி. மைத்ரேயன்...!
அதிமுகவுக்கு நாஞ்சில் சம்பத் வந்தால் வரவேற்போம் என்று அதிமுக எம்.பி. மைத்ரேயன் கூறியுள்ளார்.
சிறந்த பேச்சாளரான நாஞ்சில் சம்பத், மதிமுகவில் இருந்து விலகிய பிறகு, அதிமுகவில் ஐக்கியமானார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பிளவுபட்ட அதிமுகவில், அதிமுக அம்மா அணிக்கு ஆதரவு அளித்து வந்தார்.
இந்த நிலையில், டிடிவி தினகரன் தனி அமைப்பு ஒன்றை கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவாக்கினார். இந்த நிலையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்து வந்த நாஞ்சில் சம்பத், திடீரென விலகினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும், அண்ணா - திராவிடம் என்பதை தவிர்த்து என்னால் பேச முடியாது என்றும் விளக்கம் கூறினார். இனிமேல் நான் எந்த அரசியலிலும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
டிடிவி தினகரனை விட்டு விலகிய நிலையில் நாஞ்சில் சம்பத் மீது தினகரன் ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதிமுக எம்.பி. மைத்ரேயன் கூறும்போது, நாஞ்சில் சம்பத், அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம் என்று கூறினார்.
அதிமுக எம்.பி. மைத்ரேயன், செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது அவரிடம், நாஞ்சில் சம்பத்தை அதிமுகவில் இணைத்துக் கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், அதிமுகவுக்கு நாஞ்சில் சம்பத் வந்தால் வரவேற்போம் என்றார். மேலும் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதால் பலனில்லை என்றும் மைத்ரேயன் எம்.பி. கூறினார்.