தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் சர்ச்சை..அரசை விட இவர்கள் மேம்பட்டவர்களா..? கோபத்தில் சீறிய கனிமொழி..
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க மறுத்த ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழக அரசின் அரசாணையை பற்றிக் கூட தெரிந்துகொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாக பணியாற்ற முடியும் என்றும் தமிழக அரசை விட இவர்கள் மேம்பட்டவர்களா என்றும் எம்.பி கனிமொழி காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார்.
73 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொணடாடப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் சார்பிலும், அனைத்து அலுவலகம், அனைத்து பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்து பக்கங்களிலும் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறும் இதற்கு மரியாதை செய்யும் வகையில் அனைவரும் எழுந்து நிற்பது வழக்கம்.
அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து, தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். பாடல் பாடும்போது மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள்,கர்ப்பிணிகள் தவிர அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் எனும் அரசாணையை கடந்த 17.12.2021 அன்று வெளியிட்டார்.
குடியரசு தினத்தையொட்டி சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் அதன் மண்டல இயக்குனர் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.இதுகுறித்து அவர்களிடம் ஒரு தரப்பினர் விளக்கம் கேட்டபோது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக வங்கி அதிகாரி வாதிட்டார். இதனால் இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டவே, வங்கியின் உயர் அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு மரியாதை செலுத்துவது உறுதி செய்யப்படும் என்று தெரிவித்து வாக்குவாதத்தை முடித்து வைத்தார்.
இதனிடையே ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு தனது டிவிட்டர் பதிவு மூலம் நறுக் கேள்வி எழுப்பியிருக்கிறார் கனிமொழி எம்.பி. அதில், ''ஒரு அரசாணையை கூட தெரிந்துகொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? இல்லை இவர்கள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா? என கோபம் கொப்பளிக்க பதிவிட்டிருக்கிறார்.அத்துடன் தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநில பாடலாக அறிவித்து வெளியிட்ட அரசாணை இணைந்துள்ளார்.