டெல்லி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தமிழ் பேராசிரியர் பதவிகளை நிரப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லியில் வாழும் பல லட்சம் தமிழர் குடும்பங்களுக்காக ஏழு தமிழ்ப் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் பள்ளிக்கல்வி முடித்தவர்களுக்கும் தமிழகத்திலிருந்து வருபவர்களின் உயர்க்கல்விக்காகவும் தமிழக அரசால் கடந்த 2007-ல் அளிக்கப்பட்ட ரூ.50 லட்சம் நிதியால் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான பிரிவு தொடங்கப்பட்டது. இந்தப் படிப்பில் சேர்வதற்கு டெல்லி மட்டுமின்றி தமிழகத்தில் இருந்தும் மாணவர்கள் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் பல ஆண்டுகளாக தமிழ் மொழியில் சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வுப்படிப்பு இங்கு உள்ளன. இச்சூழலில் டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியர்கள் ஓய்வுபெற்று, 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் மாணவர்கள் தமிழ் பயில முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் டெல்லி பல்கலைக்கழகத்தின் பிரபலக் கல்லூரியான லேடி ஸ்ரீராமில் பணியாற்றிய தமிழ்பேராசிரியர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றிருக்கிறார். மற்றொரு மகளிர் கல்லூரியான மிராண்டா ஹவுஸிலும் 10 ஆண்டுகளுக்கு முன் தமிழ் பேராசிரியர் ஓய்வு பெற்றார். இந்த 2 பணியிடங்களும் வேறு மொழிகளுக்கு மாற்றப்பட்டு விட்டதால் அந்த கல்லூரிகளில் தமிழ் பிரிவுகள் மூடப்பட்டு விட்டன. இது, மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதி மீறல் ஆகும் என்று குற்றச்சாட்டப்படுகிறது. குறிப்பாக டெல்லியில் பிரபலமான இந்த 2 மகளிர் கல்லூரிகளிலும் தமிழ் கல்வி பெறும் வாய்ப்பை மாணவர்கள் இழந்துள்ளனர். இந்தச் சூழலில், டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு தொடங்க அனுமதியிருந்தும் பேராசிரியர்கள் அமர்த்தப்படாததால் முனைவர் ஆய்வு மட்டும் தொடர்கிறது.

இதுகுறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி எம்.பி. கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுள் மிகுந்த மதிப்புமிக்கது டெல்லி பல்கலைக்கழகம். இது அதன் பன்முகத்தன்மையால் அறியப்பட்டது. இந்த நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாகத் தமிழ்த் துறைக்குப் பேராசிரியர்கள் நிரப்பப்படாமல் உள்ளனர். இதன் காரணமாகப் பிற கல்லூரிகளிலும் தமிழ்ப் பேராசியர்கள் நிரப்பப்படாமல் இருப்பது தமிழ்த் துறையை மூடும் அச்சம் தரும் சூழலுக்கு வழிவகுக்கும். மேலும் டெல்லியின் மிராண்டா ஹவுஸ் கல்லூரி , லேடி ஸ்ரீரா கல்லூரியிலும் தமிழ்ப் பேராசிரியர் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. எனவே காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
