திருப்பரங்குன்றம் தொகுதியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19ம் தேதி இடை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடுவதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகிவிட்டன. அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். இதைதொடர்ந்து, பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது.
இதற்கிடையில், தேர்தல் விதிமுறைக்களை கடைபிடிக்க தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன், தேர்தல் பறக்கும்படையினை அமைத்தது. இதை தொடர்ந்து, தேர்தல் கண்காணிப்பு குழு வரும் 3ம் தேதி, மேற்கண்ட தொகுதிகளுக்கு வருகின்றனர். தலா 2 பேர் என 6 பேர் வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை திருப்பரங்குன்றம் தொகுதியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மதுரையை நோக்கி சென்ற ஒரு காரை சோதனை செய்தபோது, ரூ.3 லட்சம் எவ்வித ஆவணமும் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டது தெரிந்தது.
இதுகுறித்து விசாரித்தபோது, காரில் வந்தவர் மதுரையை சேர்ந்த ஸ்ரீபால் என்றும், வியாபாரத்துக்காக கொண்டு செல்வதாக கூறினார். ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லாததால், அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், உரிய ஆவணங்களை காண்பித்து, பணத்தை பெற்று செல்லும்படி ஸ்ரீபாலுக்கு அறிவுறுத்தி அனுப்பினர்.
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.3 லட்சத்தை தேர்தல் பறக்கும; படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
