பணமும், அதிகாரமும் இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணுவீங்களா ? மோடி, அமித்ஷாவை வறுத்தெடுத்த மாயா !!
அரசியலில் பண பலமும், அதிகார பலமும் எப்போதுமே கை கொடுக்காது என்றும் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றி விடலாம என்னும் பாஜகவினரின் கனவை கர்நாடக மாநிலம் நிர்மூலமாக்கி விட்டது என்றும் மாயாவதி தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், அதிக தொதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனை அடுத்து எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். அவர் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவிட்டார்.
ஆனால் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நேற்று மாலை 4 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதனையடுத்து குதிரைபேரத்தில் இறங்கிய பாஜக மத்திய அரசு, ஆசை வார்த்தைகளை காட்டி காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்றது.
பாஜகவின் இந்த செயல் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கர்நாடகா விஷயத்தில் பாஜகவின் பாட்சா பலிக்கவில்லை.
இந்த நிலையில் உணவு இடைவேளைக்கு பின் இன்று 3.30 மணியளவில் மீண்டும் கூடிய சட்டப்பேரவையில் எடியூரப்பா பேசினார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருந்த நிலையில் தொடர்ந்து உருக்கமுடன் பேசிய அவர், கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி சட்டப் பேரவையில் இருந்து வெளியேறினார்..
கர்நாடக மாநில அரசியலில் ஏற்பட்ட திடீர் திருப்பம் தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அரசியலில் பண பலமும், அதிகார பலமும் எப்போதுமே கை கொடுக்காது என உத்திரவிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. அடைந்துள்ள வீழ்ச்சி, அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்னும் அக்கட்சியினரின் கனவை நிர்மூலமாக்கி உள்ளது. இதை சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
அவர்களால் நியமிக்கப்பட்ட மாநில கவர்னர்கள் கட்சியின் உத்தரவின்படி நடந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவதைவிட, தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லலாம் என மாயாவதி கடுமையாக விமர்சனம் செய்தார்.