Modi voted in Sabarmati constituency today

குஜராத் மாநிலம் சமர்பதி தொகுதியில் உள்ள 115-ம் எண் வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். இந்த தொகுதியில் பாஜக சார்பில் அரவிந்த் படேலும், காங்கிரஸ் சார்பில் ஜீதுபாய் படேலும் போட்டியிடுகின்றனர்.

குஜராத் மாநில சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைந்ததும் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் அறிவித்திருந்தது. இதையடுத்து . கடந்த 9-ம் தேதி 83 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு இரண்டாம் மற்றும் இறுதிகட்டமாக வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.

காலை 8 மணிக்கே பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பெண், காந்திநகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிதார். அதே போல், பட்டேல் இன போராட்டக்குழுவின் தலைவர் ஹர்திக் பட்டேல், முன்னாள் முதலமைச்சர் ஆனந்திபென் பட்டேல் ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

அகமதாபாத்தின் நாரன்புராவில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தனது ஓட்டை பதிவு செய்தார். வேஜால்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வாக்களித்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்தர மோடி சபர்மதியில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பிரதமரின் வருகையை தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சக வாக்காளர்களுடன் அவர் வரிசையில் நின்று வாக்களித்தார். 

இதைத் தொடர்ந்து மோடி சிறுது தூரம் நடந்து சென்று அங்கு கூடியிருந்த பொது மக்களைப்பார்த்து கைகளை அசைத்து வாழ்த்துத் தெரிவித்தார்.