7 நாட்கள் பயணத்தை முடித்து தாயகம் திரும்பினார் பிரதமர் மோடி
அமெரிக்காவுக்கு 7 நாட்கள் அரசு முறைபயணமாகச் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலை டெல்லி திரும்பினார். அவருக்கு பாஜக சார்பில் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
அமெரிக்காவுக்கு 7 நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி கடந்த 21-ம் தேதி சென்றார். முதலில் ஹூஸ்டன் நகரில் அமெரிக்க இந்தியர்கள் சார்பில் நடத்தப்பட்ட ஹவுடி மோடி நிகழ்ச்சியில் ஒரேமேடைசியில் அதிபர் ட்ரம்புடன் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார்.
அதன்பின் நியூயார்க் சென்ற பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார், பல்வேறு நாடுகளின் தலைவர்கள், முதலீட்டாளர்கள் சந்தித்துப் பேசினார். இறுதியாக நேற்று ஐநா பொதுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றி தனது பயணத்தை பிரதமர் மோடி நிறைவு செய்தார்.
இந்த பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலை பிரமதர் மோடி டெல்லி விமானம் நிலையத்துக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு பாஜக சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் வருகையையொட்டி, பாதுகாப்பு பன்மடங்கு அதிகப்படுத்தப்பட்டு இருந்தது, கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன.
டெல்லிக்கு புறப்படும் முன் பிரதமர் மோடி ட்விட்டரில் கூறுகையில், தன்னுடைய அமெரிக்க பயணம் குறித்தம், அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்தும் பிரதமர் மோடி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
" இந்தியா-அமெரிக்கா உறவு இதயங்களை இணைத்து வைத்திருக்கிறது. ஹூஸ்டனில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். என்னை மேலும் சிறப்புக்குரியதாக்கிவிட்டது. மக்களின் இந்த அன்பு தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா மக்களுடன் அமெரிக்காவின் உயர்ந்த மதிப்பான விஷயங்கள் கலந்திருப்பதை வெளிப்படுத்தியது” எனத் தெரிவித்திருந்தார்.