அவசர சட்டத்துக்கு அவசர ஆலோசனை – பிரதமரை சந்தித்தார் ஒ.பி.எஸ்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும். பீட்டா அமைப்பு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.
குறிப்பாக கடந்த 3 நாட்களாக, ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மணவிகள் களம் இறங்கியுள்ளதால், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது.
மாணவர்களின் இந்த போராட்டத்துக்கு அரசியல் கட்சியினர், சினிமா நட்சத்திரங்கள், வணிகர் சங்கத்தினர், விவசாய சங்கத்தினர், பல்வேறு சமூக நல அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதைதொடர்ந்து தமிழர்களின் கலாச்சாரத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளிலும் ஆதரவு பெருகி வருகிறது.
இதையொட்டி நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம், போலீசார் சமரசம் பேசினர். அப்போது, முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிக்கு அவசர சட்டம் இயற்ற வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர். இதனால், அந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு விவகரம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசுவதற்காக டெல்லி சென்றார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், மோடியை சந்தித்தார்.
அப்போது, “தன்னால் ஆன முயற்சிகளை எடுப்பதாக” பிரதமர் மோடி உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், இன்று மதியம் சுற்றுச்சூழல் இணை அமைச்சர் அனில்மதவ் தவே தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில், அவசர சட்டம் தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படும் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
