தமிழக மக்களின் விருப்பத்துக்கு மாறாக மோடி அரசு நடக்காது... பிரதமர் மீது திருமாவளவன் நம்பிக்கை..!
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக மக்களின் விருப்பத்துக்கு மாறாக நரேந்திர மோடி அரசு செயல்படாது என நம்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அனைத்துக் கட்சி குழு சந்தித்தது. தமிழக தரப்பு தெரிவித்த கருத்துக்களை மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டு அரசின் ஒப்புதலின்றி மேகதாது அணை கட்டப்படமாட்டாது என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார். எனவே, தமிழக மக்களின் விருப்பத்துக்கு மாறாக பிரதமர் நரேந்திர மோடி அரசு செயல்படாது என்று நம்புகிறோம்.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து தமிழ் நாட்டு மக்களின் விருப்பத்தை அறிந்துகொள்ள நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, முதல்வரிடம் அறிக்கையை அளித்துள்ளது. எனவே அந்த அறிக்கை மீதான நடவடிக்கையை இனி தமிழக அரசு மேற்கொள்ளும். இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவேதான் நீட் தேர்வுக்கு மாணவர்களுக்கு தமிழக அரசு பயிற்சி அளிக்கிறது. ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை நமக்கு சாதகமாக அமையும் என நிச்சயமாக நம்புகிறோம்.” என்று திருமாவளவன் தெரிவித்தார்.