கேள்வி கேட்ட மோடி, தலை தெறிக்க ஓடி வந்த பன்னீர்: எடப்பாடி எக்கச்சக்க அப்செட்டான கதை...
மோடியிடம், ஓ.பி.எஸ். வகையாக சிக்குவார்! என்று வெகுவாக எதிர்பார்த்த எடப்பாடி அண்ட்கோவுக்கு அப்படியொன்றும் நடைபெறாதது மிகப்பெரிய வருத்தமே! என்கிறார்கள் விமர்சகர்கள்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு நடத்திய நலத்திட்ட துவக்க விழாவுக்கு பிரதமர் வந்து சென்று இரண்டு நாட்கள் கழிந்துவிட்டனதான். ஆனால் அப்போது உள்ளுக்குள் நிகழ்ந்த சில விஷயங்கள் இப்போது கசிய துவங்கியுள்ளன.
மோடியின் இந்த விசிட்டை எடப்பாடி அண்ட்கோ குஷியோடு எதிர்பார்த்தது. காரணம்?...’பிரதமர் சொன்னதால்தான் எடப்பாடி அணியோடு இணைந்தேன்! பிரதமர் சொன்னதால்தான் அமைச்சரவையில் இணைந்தேன்!’ என்று பன்னீர்செல்வம் பற்ற வைத்த நெருப்பு இன்னமும் அடங்கவில்லை. அதற்குள் பிரதமரே தமிழகம் வருகிறார், அவரை பன்னீர் வரவேற்க நிற்க வேண்டும்! என்பதால் பல கெமிக்கல் ரியாக்ஷன்களை மோடியிடம் எதிர்பார்த்தது பழனிசாமி அண்ட்கோ.
ஆனால் நடந்ததோ தலைகீழ்! சென்னை விமான நிலையத்திலிருந்து, அடையாறு கடற்படைத்தளத்துக்கு ஹெலிகாப்டரில் மோடி கிளம்ப, அவரோடு முதல்வரும் கவர்னரும் ஒட்டிக் கொண்டார்கள். அதனால் அடுத்த ஹெலிகாப்டரில் பன்னீர், பொன்.ராதாகிருஷ்ணன், கிரிஜா ஆகியோர் வந்திருக்கின்றனர். கலைவாணர் அரங்கில் காரைவிட்டு இறங்கிய பிரதமர், அங்கே பன்னீர்செல்வம் இல்லாததை கண்டு, ‘வேர் இஸ் பன்னீர்செல்வம்?’ என்றாராம். உடனே தலைதெறிக்க ஓடி வந்து இணைந்தாராம் தள்ளி நின்ற பன்னீர்செல்வம்.
இதுபோக எழுபது லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பிரதமர் துவக்கியபோது, தனக்கடுத்து எடப்பாடியாரை ஒரு மரக்கன்றை நட சொன்னார். ஒதுங்கியிருந்த பன்னீரை பிடித்து இழுத்து, மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றுமாரு சொல்ல, பன்னீருக்கும் பலமான புன்னகை.
ஆனால் எடப்பாடியின் கண்களில், அந்த புது வெள்ளை கண்ணாடியை தாண்டியும் கடுப்பு வெடித்ததை எத்தனை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கவனித்தார்களோ!?