வரம்பு மீறி கண்டபடி பேசாதீங்கப்பா….. வாய் திறந்த மோடி!! பாஜக எம்.பி., எம்எல்ஏ க்களுக்கு உத்தரவு….
பொதுப் பிரச்சனைகளில் வரம்பு மீறி கண்டபடி பேச வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி பாஜக எம்.பி.ககள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.
சிறுமி கொலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் பாஜக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றது, குற்றவாளிகளுக்கு எதிராக போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த போது பாஜக ஆதரவு வழக்கறிஞர்கள் போராட்டம் மேற்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிறுமிக்கு நீதி வேண்டும் என இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதே போன்று உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டு உள்ளார்.
இதனிடையே பாஜகவினர் தெரிவித்துவரும் கருத்துக்கள் அக்கட்சியின் தலைமைக்கு கடும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் பலாத்கார விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என ஏற்கனவே பிரதமர் மோடி பேசியிருந்தார்.
இந்நிலையில் பொது பிரச்சனைகளில் வரம்பு மீறி பேச வேண்டாம் என பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசும்போது, நாம் தொடர்ந்து செய்யும் தவறுகள் மீடியாக்களுக்கு தீனி போட்டு வருகிறது. மீடியாக்கள் கேமராக்கள் முன்னதாக பேசும்போது, நாம் சிறந்த சமூக விஞ்ஞானிகள் போலவும், ஆய்வாளர்கள் போலவும் நினைத்துக்கொண்டு வார்த்தைகளை பிரயோகம் செய்கிறோம். அது நம்மை சிக்க வைக்கிறது என குறிப்பிட்டார்.
நாம் வாய் தவறி கூறும் வார்த்தைகளை மீடியாக்கள் ஊதி பெரிதாக்குகிறது. தீவிரவாதம், பாலியல் பலாத்காரம் என எந்த பிரச்னைகளை எடுத்து கொண்டாலும் இது நடக்கிறது. இதை பற்றிய கொஞ்சமும் கவலைப்படாமல் கருத்துக்களை தெரிவித்து வருகிறோம். இதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் உருவாகி வருகிறது என வேதனை தெரிவித்தார்.
எனவே இதுபோன்ற அர்த்தமற்ற கருத்துக்கைள கூறுவதையும், ஆர்வக்கோளாறில் கருத்துக்களை தெரிவிப்பதையும் நாம் உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும். ஊடகங்கள் அவர்களது பணியை செய்யட்டும்,” என்று கூறிஉள்ளார்.