கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக ஒட்டபட்டுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் மனோரஞ்ஜிதம் நாகராஜன். இவர் திமுகவின் மாலதியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.

செல்வி ஜெயலலிதாவின் அன்பை பெற்றிருந்த இவர் 2016 வேட்பாளர் நேர்காணலுக்கு முதல் நபராக அழைக்கப்பட்டவர் ஆவார்.

தற்போது ஜெயலலிதா இல்லாத நிலையில் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலைமை அதிமுகவில் உருவாகியுள்ளது.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது சத்தம் போட்டு பேசக்கூட பயந்தவர்கள் எல்லாம் இன்று மற்ற சில கட்சிளில் உள்ள நடைமுறைகளை போல மிரட்டல் மற்றும் அதிகார தொனிக்கு மாறியுள்ளனர்.

அதே போன்று உட்கட்சி மோதலும் தற்போது துளிர் விட்டு மெல்ல மெல்ல ஆங்காங்கே வளர்ந்து வருகிறது.

கட்சியின் தலைமையால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகளோ அல்லது சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்த்து எந்த நிர்வாகியும் அல்லது தொண்டர்களும் தவறே செய்து இருந்தாலும் கேள்வி கேட்க மாட்டார்கள்.

அனால் தற்போது நிலைமையே தலைகீழாக மாறியுள்ளது. அதன் வெளிப்பாடாகத்தான் ஊத்தங்கரை பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஆகும்.

அந்த போஸ்டரில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் இருந்து வந்திருந்தாலும் இரண்டவது முறையாக ஊத்தங்கரை தொகுதி உறுப்பினரை தேர்ந்தெடுக்க உதவிய அதிமுக நிர்வாகிக்கு பொங்கல் பரிசாக கன்னத்தில் பளார் என அறைவிட்ட ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி நன்றி என அச்சிடப்பட்டுள்ளது.

கடந்த பொங்கல் நாளன்று நடைபெற்ற விழா ஒன்றில் மத்தூர் நிர்வாக ஒன்றிய நிர்வாகி ஒருவரை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சித நாகராஜன் வாக்குவாதத்தின் பொது கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாகவே இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ஒட்டியது யார் என்பது குறித்து அதிமுக விசாரணை நடைபெற்று வருகிறது.

இது கட்சி தலைமைக்கு அனுப்பப்படும் எனவும் எம்.எல்.ஏ தரப்பினர் தெரிவித்துள்ளனர்.