முக்குலத்தோர் மக்கள் உணர்வுகளை இழிவுபடுத்திவிட்டார்... மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கோரணும்... கருணாஸ் காட்டம்..!
தேவர் ஜெயந்தி விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திருநீரு பூச மறுத்தது முக்குலத்தோர் மக்களின் உணர்வுகளை இழிவுபடுத்தி விட்டது என முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிற மத நிகழ்ச்சிகளுக்கும்போது குல்லா அணிந்துகொள்கிறார். ஆனால், தேவர் ஜெயந்தி விழாவில் திருநீர் பூச மறுத்தது, முக்குலத்தோர் மக்களின் உணர்வுகளை இழிவுபடுத்தி விட்டது. இதற்காக மு.க. ஸ்டாலின் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும். மு.க. ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்கும் வரையில் நாங்கள் விடமாட்டோம். போராட்டங்களை நடத்துவோம்.
சட்டப்பேரவைத் தேர்தல் அதிமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கண்டிப்பாக கேட்போம். தேர்தலில் போட்டியிட சீட்டு கொடுக்கவிட்டால், அதிமுகவை ஆதரிக்க மாட்டோம். சசிகலாவுக்கு எந்தச் சூழலிலும் நான் அரணாக இருப்பேன். இன்னும் நூறு பாஜக வந்தாலும்கூட தமிழ் மண்ணில் சமூக நீதி காக்கப்படும்” என்று கருணாஸ் தெரிவித்தார்.