கண்கலங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்... ஆறுதல் படுத்திய தங்கை செல்வி..!
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்கலங்கினார்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்கலங்கினார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப் பிடித்தது. மேலும் திமுக சின்னத்தில் போட்டியிட்ட 8 பேர் வெற்றி பெற்றதையடுத்து ஸ்டாலின், ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார். இதனையடுத்து, இன்று காலை ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மு.க.ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து, 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மற்றும் அமைச்சர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஆளுநரின் தேநீர் விருந்திலும் முதல்வர் கலந்துகொண்டார். இதன்பின்னர், அங்கிருந்து புறப்பட்டு, துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்களுடன் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தார். அங்கு, திமுக தொண்டர்கள் பலரும் சூழந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், வீட்டுக்குள் சென்று தன் தாயார் தயாளு அம்மாளிடம் முதல்வர் ஆசி பெற்றார்.
பின்னர், தன் தந்தையும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தி ஆசி பெற்றார். அப்போது, உணர்ச்சிப்பெருக்கால் கண்கலங்கிய ஸ்டாலினை, அவரது தங்கை செல்வி ஆறுதல்படுத்தினார்.