முதலமைச்சரான பிறகு மு.க.ஸ்டாலின் சிரிப்பதே இல்லை...! சட்டமன்றத்தில் காரணம் சொன்ன மா.சு..!
சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், முதலமைச்சரை சந்திக்க வருபவர்கள் அவரிடம் எப்போதும் இருந்த கதாநாயக புன் சிரிப்பு, பொறுப்பேற்ற பிறகு ஏன் இல்லை? என கேட்பதாக தெரிவித்தார்.
முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு மு.க.ஸ்டாலின் சிரிப்பதே இல்லை என்றும் அதற்கு காரணம் என்ன என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அடையாளங்களில் ஒன்று அவரது புன் சிரிப்பு. எப்போதும் புன்சிரிப்புடன் காணப்படுபவர் என்று அவருக்கு ஒரு பெயர் உண்டு. குறிப்பாக கட்சி நிர்வாகிகள் சந்திப்பு, பொது நிகழ்வுகளில் ஸ்டாலினை எப்போதும் புன் சிரிப்புடன் தான் பார்க்க முடியும். மேலும் பேச்சின் போதும் கூட சில புன் சிரிப்புகளை வர வைக்கும் அம்சங்களை எப்போதும் ஸ்டாலின் வைத்திருப்பார். கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்களின் போது கூட எத்தனை கூட்டங்களில் பேசினாலும் புன் சிரிப்பு மாறாமல் காணப்பட்டவர் ஸ்டாலின். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றது முதல் ஸ்டாலினிடம் அந்த புன்சிரிப்பு மிஸ்ஸிங்.
அதிலும் தேர்தலில் திமுக வென்று அடுத்து ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல் உறுதியான உடன் ஸ்டாலின் கொளத்தூரில் தனது வெற்றிச் சான்றிதழை வாங்க சென்ற போது உற்சாகம் குறைந்தே காணப்பட்டார். தொடர்ந்து கலைஞர் நினைவிடம் சென்ற போதும் உற்சாகம் மிஸ்ஸிங். இதன் பிறகு முதலமைச்சராக பதவி ஏற்ற விழாவில் கூட ஸ்டாலின் ஏதோ யோசனை வயப்பட்டவராகவே காணப்பட்டார். தொடர்ந்து முதலமைச்சராகி கோட்டையில் அமர்ந்த போதும் வழக்கமான புன்சிரிப்பு அவரிடம் காணப்படவில்லை. மேலும் எப்போதும் சீரியசாக எதையோ யோசித்துக் கொண்டே இருப்பவர் போலவே ஸ்டாலின் காணப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் புன் சிரிப்பு ஏன் இல்லை என்பதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், முதலமைச்சரை சந்திக்க வருபவர்கள் அவரிடம் எப்போதும் இருந்த கதாநாயக புன் சிரிப்பு, பொறுப்பேற்ற பிறகு ஏன் இல்லை? என கேட்பதாக தெரிவித்தார். அவர்களிடம் பதிலளிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இந்த உச்சத்தில் இருக்கும்போது பொறுப்பேற்றிருக்கும்போது எப்படி சந்தோசமாக இருக்க முடியும் எனவும், தான் ஏற்றிருப்பது மலர் கிரீடம் இல்லை, முள் கிரீடம் என கூறுவதாக தெரிவித்தார்.
முதலமைச்சரின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் 7427 தொற்று எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது, இன்னும் ஒருவார காலத்திற்குள் முற்றிலும் இல்லாத தமிழ்நாடு என்கிற நிலை வரும் எனவும் சுப்பிரமணியன் கூறினார். தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு தான் ஸ்டாலினிடம் அவரது வழக்கமான புன்சிரிப்பை பார்க்க முடியும் என்றும் சுப்பிரமணியன் தெரிவித்தார்.