7 ஆண்டுகளில் மோடி செய்யாததை 100 நாட்களில் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார்... அழகிரி பெருமிதம்..!
ஜிஎஸ்டி மூலம் வியாபாரிகளையும் பொதுமக்களையும் கொள்ளையடிப்பதற்காக பாரதிய ஜனதா பயன்படுத்துகிறது. பெண்கள் அதிக அளவில் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய்க்கு 18 சதவீத வரி விதிப்பது தேங்காய் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
வருமானம் ஈட்டி வருகின்ற ரயில்வே துறை, காப்பீட்டு நிறுவனம், நிலக்கரி சுரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை பா.ஜ.க விற்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பாக தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் இன்று நடைபெற்றது.
இதனையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் கருப்புகொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கருப்புகொடி ஏற்றி கண்டன உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், ’’புதிய வேளாண் திருத்த சட்டம், குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறேன். இது அரசியல் போராட்டம் அல்ல. இந்திய வரலாற்றை காப்பாற்றுவதற்கான போராட்டம்.
நேரு இந்தியா முழுவதும் ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி பல லட்சம் கோடி வருமானம் ஈட்டினார். ஆனால் வருமானம் ஈட்டி வருகின்ற ரயில்வே துறை, காப்பீட்டு நிறுவனம், நிலக்கரி சுரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை பா.ஜ.க விற்கிறது. விரைவில் மக்கள் விரோத பாஜக கொண்டுவந்த தவறான கொள்கைகள் தூக்கி வீசப்படும். ஜிஎஸ்டி மூலம் வியாபாரிகளையும் பொதுமக்களையும் கொள்ளையடிப்பதற்காக பாரதிய ஜனதா பயன்படுத்துகிறது. பெண்கள் அதிக அளவில் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய்க்கு 18 சதவீத வரி விதிப்பது தேங்காய் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
ஏழு ஆண்டுகள் மோடி செய்ய முடியாத ஒன்றை தமிழகத்தில் 100 நாட்களில் ஸ்டாலின் செய்துள்ளது. ஸ்டாலினை பின்பற்றி பிரதமர் மோடி பெட்ரோல் வரியை படிப்படியாக குறைத்தால், நமது பொருளாதாரம் மேம்படும். பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்து தவறானது. திமுக அரசு ஒரு தெளிவான நிலையில் இருக்கிறது’’என அவர் தெரிவித்தார்.