அதிமுக ஆட்சியில் ஓரங்கட்டப்பட்ட அந்தத் திட்டத்தை தூசு தட்டிய மு.க.ஸ்டாலின்.. சட்டப்பேரவையில் அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் தந்தைப் பெரியார் பெயரால் புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 1998-ஆம் ஆண்டில் பெரியார் நினைவு சமத்துவப்புரம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி முதல் சமத்துவபுரம் மதுரை திருமங்கலம் அருகே மேலக்கோட்டையில் அமைக்கப்பட்டது. 2001-ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் 145 சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டன. 2001-ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2006-ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக, மீண்டும் சமத்துவபுரம் திட்டத்தைத் தொடங்கியது. 2011 வரை புதிதாக 95 சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டன. 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் சமத்துவபுரம் திட்டம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் சமத்துவபுரம் திட்டம் மீண்டும் தொடங்கும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், “ஏற்றத்தாழ்வை இடித்து, சமூகத்தை சமப்படுத்த போராடியவர் பெரியார். அவருடைய பெயரால் 240 சமத்துவபுரங்களை கட்டினார் கருணாநிதி. அந்தச் சமத்துவபுரங்கள் சரியாக பராமரிக்கப்படாமல் அவல நிலையில் உள்ளன. அந்தச் சமத்துவபுரங்கள் உடனடியாகச் சீரமைக்கப்படும். மேலும், தமிழகத்தில் மேலும் புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.