வெற்றிக் களிப்பில் அறிவாலயம். உள்ளாட்சியில் வாகை சூடியவர்களை நேரில் பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது ஒரு மகிழ்ச்சி என்றால் தலைவர் தளபதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சி என்று திமுக-வினர் தெரிவித்துள்ளனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது ஒரு மகிழ்ச்சி என்றால் தலைவர் தளபதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சி என்று திமுக-வினர் தெரிவித்துள்ளனர்.
நடந்துமுடிந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி, ஓ.பி.எஸ். மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்தும் அதிமுக-வுக்கு படுதோல்வியே கிடைத்தது. ஆனால் திமுக தலைவர் பிரச்சார களத்திற்கு செல்லாமலேயே அவரது அமைச்சரவை சகாக்களும், திமுக தொண்டர்களும் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளாட்சி வெற்றியை பரிசாக அளித்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல் வெற்றியால் அகம் மகிழ்ந்திருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தங்கள் கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களை நேரில் அழைத்து பாராட்டி வருகிறார். அந்தவகையில், செங்கல்பட்டு, விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடிய மக்கள் பிரதிநிதிகள், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தேர்தலில் வெற்றி பெற்றது ஒரு மகிழ்ச்சி என்றால், முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றது இரட்டிப்பு மகிழ்ச்சி என்று முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற திமுக-வினர் கூறியுள்ளனர். வெற்றியாளர்களை வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடவும், வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி கூறவும் அறிவுறுத்தியிருக்கிறார்.