''களத்தில் பெரிய எதிரியே இல்லை'' தீயா வேலை செஞ்சா திமுகவே வெல்லும்; கெத்துக்காட்டும் ஸ்டாலின்!
ஜெயலலிதா உயிருடன் இல்லை. அதிமுக மூன்றாக பிளவுபட்டு நிற்கிறது. இந்த சூழ்நிலையில், ஆர்.கே.நகரில் திமுக தோற்றால் ஸ்டாலின் ஆளுமை மீது, கேள்வி எழுப்பும் சூழல் உருவாகும்.
பன்னீர் அணிக்கு, மக்கள் ஆதரவு தாமாகவே கிடைக்கிறது. அந்த அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு, மக்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல பரிச்சயம் இருப்பதால், உற்சாகமாக வலம் வருகிறார்.
தினகரனை பொறுத்தவரை, பணத்தை வாரி இறைக்கிறார். அமைச்சர்கள் குழு மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் பைசல் செய்து வருகிறது. பெண்களை கவர தனி திட்டமே செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தீபாவை பெரிய அளவில் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், அவர் கணிசமான வாக்குகளை பிரிப்பர் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால், திமுக வேட்பாளர் மருது கணேஷ், மற்ற வேட்பாளர்களுக்கு நிகரான ஆளுமை கொண்டவராக இல்லை என்பது பெரிய மைனஸ்.
எம்.எல்.ஏ க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன், காலையில் இருந்து மாலை வரை மருது கணேஷ், தொகுதி முழுக்க வலம் வருகிறார்.
ஆனாலும், திமுகவின் வழக்கமான வாக்குகளை தவிர, புதிய வாக்குகளை பெற முடியாத நிலையிலேயே அவர் இருக்கிறார்.
குறிப்பாக வெற்றியை நிர்ணயிக்கும் பெண்கள் வாக்குகளை பெற, சரியான செயல் திட்டம் திமுகவிடம் இல்லை.
பெண்களை வளைக்க, அனுதாபம் தேடும் எந்த ஆயுதமும் திமுகவிடம் தற்போது இல்லை. மேலும் வைட்டமின் 'ப' வை இறக்க கொஞ்சம் கூட மனம் இல்லாமல் இருக்கிறது.
கடந்த தேர்தலில், வைட்டமின்'ப' வை இறக்க யோசித்ததன் விளைவே, அதிக இடங்களை பிடித்தும், ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பிடிப்பதில் திமுக கோட்டை விட்டது.
இதை, தொகுதியில் உள்ள திமுக தொண்டர்களும், மூத்த நிர்வாகிகளும் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். அதை, செயல் தலைவர் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.
அதிமுக மூன்றாக பிளவு பட்டுள்ள நிலையில், திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றாலும், அது ஸ்டாலின் தலைமை மீது கேள்வி எழுப்பும் சூழ்நிலையை உருவாக்கும்.
எனவே, பணத்தை கொஞ்சமாவது அள்ளி தெளித்து, தீயாக வேலை செய்தால் மட்டுமே திமுக ஜெயிக்கும் என்ற நிலையில் தான், ஆர்.கே.நகர் தொகுதியின் தற்போதைய நிலவரம்.