’நான் கருணாநிதி மகன்...’ கெத்தாக ஒதுங்கி பேரனுடன் கைகோர்த்த மு.க.அழகிரி..!
எனக்கு உடல்நிலை சரியில்லை. இனி புதிய கட்சி ஆரம்பிப்பது, அதை கொண்டு செல்வது எல்லாம் என்னால் முடியாது'' என மறுத்துவிட்டார்
கடந்த வாரம் டெல்லியில் இருந்து முக்கிய பா.ஜ.க. தலைவர் ஒருவர் மதுரைக்கு வந்திருக்கிறார். அவர் கருணாநிதி மகனான மு.க.அழகிரியை சந்தித்து பேசியிருக்கிறார். ''பா.ஜ.க.வுக்கு வாருங்கள்'' என அவர் நீண்ட நேரம் அழகிரியிடம் பேசி சம்மதிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்.
அந்த பேச்சுவார்த்தை முடிவில், ''நான் கலைஞர் மகன். நான் பா.ஜ.க.வில் சேருவது என்பது நடக்காத விஷயம்'' என அழகிரி பதிலளித்தார். அந்த பதிலை பெற்றுக்கொண்டு டெல்லி சென்ற அந்த தலைவர் இந்த வாரம் மறுபடியும் அழகிரியை சந்தித்தார். இந்த முறை ''சரி நீங்கள் பாஜகவில் சேர வேண்டாம். ஆனால் திமுகவை ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும். அதற்கு கலைஞர் திமுக என ஒரு கட்சியை தொடங்குங்கள். அந்த கட்சிக்கு திமுகவை சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏ.க்களை நாங்கள் கொண்டு வந்து தருகிறோம். கு.க.செல்வம் அதற்கு தயாராக இருக்கிறார். எவ்வளவு செலவானாலும், அதை பாஜக பார்த்துக்கொள்ளும். உங்களுக்கு ராஜ்யசபா சீட் தருகிறோம். எதிர்காலத்தில் மந்திரி பதவியும் தருகிறோம்'' என தூண்டில் போட்டார்.
அதற்கு பதிலளித்த அழகிரி, ''எனக்கு உடல்நிலை சரியில்லை. இனி புதிய கட்சி ஆரம்பிப்பது, அதை கொண்டு செல்வது எல்லாம் என்னால் முடியாது'' என மறுத்துவிட்டார் என்கிறது டெல்லி வட்டாரங்கள். இப்போது அரசியலில் கவனம் செலுத்தாமல் இருக்கும் மு.க.அழகிரி, மதுரை அருகே உள்ள பரவையில் உள்ள பண்ணை நிலத்தில் தனது பேரனும், தாயா அழகிரி மகன் ருத்ரதேவுடன் ஜாலியாக விளையாடி பொழுதை கழித்து வருகிறார்.