முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கடந்த 2014ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டதிலிருந்து  மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவோம் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் திமுக தரப்பிலிருந்து யாரும் கண்டுகொள்ளாததால்  திமுகவில் மீண்டும் சேர்க்கக்கோரி அவரது ஆதரவாளர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கவுள்ளனர். 

திமுகவின் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரி, 2014 ஆம் ஆண்டில், கட்சியில் இருந்து 
அதிரடியாக நீக்கப்பட்டார். திமுக தலைவர் மு.கருணாநிதி உயிரோடு இருந்தவரை மு.க.அழகிரி கட்சியில் 
சேர்க்கப்படவில்லை. மு.கருணாநிதி மறைந்து சில நாட்களுக்குப் பிறகு அவரது நினைவிடத்தில் குடும்பத்தினருடன் 
அஞ்சலி செலுத்த வந்த அழகிரி, கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் தன்னுடன்தான் இருப்பதாக தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தொடர்ந்து, தன்னை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கூறி வந்தார். ஆனால், கட்சியில் தலைமையிடம் இருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக, கருணாநிதி நினைவிடத்தை நோக்கி ஊர்வலம் ஒன்றை நடத்தினார். 

இந்த ஊர்வலத்தில் ஒரு லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என மு.க.அழகிரி கூறியிருந்த நிலையில், அதற்கும் மிக குறைவானவர்களே ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கட்சியில் சேர்க்கப்பட்டால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுத்தானே ஆகவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

கருணாநிதி மறைவுக்குப் பிறகு, திமுகவுக்கு சவாலாக இருப்பேன் என்று மு.க.அழகிரி கூறி வந்தார். திமுகவில் தன்னை சேர்ப்பார்கள் என்று மு.க.அழகிரி கூறி வந்தார். தனிக் கட்சி தொடங்கும் எண்ணம் தனக்கில்லை என்றும் மு.க.அழகிரி கருத்து தெரிவித்திருந்தார்.

மதுரையில் நேற்று, மு.க.அழகிரி செய்தியாளர்கள் அவரிடம், உங்களுக்கு தொடர்ந்து திமுகவில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது? என்ற செய்தியாளர் கேள்விக்கு, ஸ்டாலினைக் கேட்க வேண்டிய கேள்வி; அங்கே போய் காரணம் கேளுங்கள். அவரைக் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? இதுபோன்ற கேள்விகளை அவரை போய் கேளுங்கள் என்று மு.க.அழகிரி கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில், மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க்கோரி அவரது ஆதரவாளர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்க உள்ளனர். அறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி சிம்மக்கல்லில் உள்ள அண்ணா சிலைக்கு அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து, மு.க.அழகிரியின் ஆதரவாளர் மன்னன், செய்தியாளர்களிடம் பேசும்போது, அழகிரியையும், எங்களையும் உடனே திமுகவில் சேர்க்க வேண்டும். இது தொடர்பாக அழகிரி வீட்டிலிருந்து கையெழுத்து இயக்கம் தொடங்கி திமுக தலைமைக்கு அனுப்ப உள்ளோம் என்று அவர் கூறினார்.