Ministers who are ready to meet dinakaran against edappadi ministers
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட போவதாக தினகரன் அறிவித்ததில் இருந்தே, அவருக்கு எதிரான அணியை உருவாக்குவதில் ஜெயக்குமார் தலைமையிலான அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தனர்.
அதற்காக, அமைச்சர் ஜெயக்குமாரை, தங்கமணி, வேலுமணி ஆகிய அமைச்சர்கள் அடிக்கடி சந்தித்து பேசி, தினகரன் எதிர்ப்பு அணியை உருவாக்கினர்.
தினகரன் திகார் சிறைக்கு செல்லும் தருணத்தில் இந்த அணி வலுப்பெற ஆரம்பித்தது. அதை தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலா பேனர்கள் மற்றும் புகைப்படங்களும் அகற்றப்பட்டன.
பின்னர் அதிமுகவின் இரு அணிகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதனால், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் மீது கடும் கொதிப்பில் இருந்தனர் தினகரன் ஆதரவாளர்கள்.
அதற்கு பிறகு, சசிகலாவுக்கு ஆதரவு அளித்ததால், மக்கள் எங்களை குற்றவாளிகளை போல் பார்த்தனர் என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதால், தினகரன் ஆதரவாளர்களின் எதிர்ப்பு அவர் பக்கமும் திரும்பியது.
இந்நிலையில், தினகரன் தற்போது, ஜாமினில் வெளிவந்துள்ளதால், அந்த நான்கு அமைச்சர்களையும் நீக்க வேண்டும் என்று, அவரது ஆதரவாளர்கள் தினகரனிடம் வற்புறுத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு மாற்றாக, தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பன் ஆகியோரை நியமிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால், எடப்பாடி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி வலுத்து வருகிறது. தற்போதுள்ள நிலையில், 7 எம்.எல்.ஏ க்கள் தங்கள் ஆதரவை விலக்கி கொண்டாலே அரசு கவிழ்ந்து விடும்.
அதே சமயம், ஆட்சி கவிழ்ந்து விட்டால், மீண்டும் ஆட்சிக்கு வருவது இயலாத காரியம் என்பது தினகரனுக்கு நன்றாகவே தெரியும். அதனால், தினகரன் எதுவேண்டுமானாலும் செய்யட்டும், நாம் நமது வழியில் செயல்படலாம் என்று அமைச்சர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
மேலும், அமைச்சர்களும் தங்களுக்கென்று சில எம்.எல்.ஏ க்களை கைவசம் வைத்திருப்பதால், தினகரன் நினைத்தால், ஆட்சியை கவிழ்க்க முடியுமே ஒழிய, புதிய ஆட்சியை அமைக்க முடியாது.
இதனால், முடிந்தவரை மோதி பார்க்கலாம் என்ற முடிவுக்கு அமைச்சர்களும் வந்துவிட்டதாக கூறும் அதிமுகவினர், இது எங்கு போய் முடியுமோ? என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.
