பேசுங்க, பார்க்குறவங்க தப்பா நினைப்பாங்க... சசிகலாவை பற்றி பேச தயங்கிய அமைச்சர்கள்..!
சசிகலா விவகாரம் தொடர்பாக புகார் அளித்த பின்பு வெளியே வந்த அமைச்சர்கள் நீங்க பேசுங்க, நீங்க பேசுங்க என மாறி மாறி தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா விவகாரம் தொடர்பாக புகார் அளித்த பின்பு வெளியே வந்த அமைச்சர்கள் நீங்க பேசுங்க, நீங்க பேசுங்க என மாறி மாறி தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, கடந்த மாதம் 27-ம் தேதி விடுதலையானார். விடுதலை நெருங்கிய நேரத்தில் அவர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணம் அடைந்தார். பின்னர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போது அதிமுகு கொடியுடன் காரில் வெளியே வந்தார். இதனால், அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்திலும் அதிமுகவினர் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில், சசிகலா தமிழகம் வரும்போது கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் சி.வி. சண்முகம் மற்றும் அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் நேற்று டிஜிபி அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து மூவரும் வெளியே வந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க நின்று கொண்டு இருந்தனர். அப்போது அமைச்சர் தங்கமணி, அமைச்சர் ஜெயக்குமாரின் கையை பிடித்து, ‘பேசுங்க, பார்க்குறவங்க தப்பா நினைப்பாங்க’ என்றார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் சி.வி.சண்முக்தைப் பார்த்து, ‘நீங்க பேசுங்க சண்முகம் பரவாயில்லை..’ என்றார். இவ்வாறு மாறி, மாறி ‘நீ பேசு... நீ பேசு..’ என சொல்லிக்கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ‘ஊரை அடித்து கொள்ளையடித்த வழக்கில் நான்கு ஆண்டு காலம் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இன்றைக்கு சிறையில் இருந்து வந்து நான் தான் அதிமுக என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் பேசுகிறார்’ என்றார். அப்போது, ‘சசிகலா தண்டனை பெற்ற வழக்கில்தான், ஜெயலிலதா தண்டனை பெற்றார், எனவே ஜெயலலிதாவும் தண்டனை பெற்றார் என்று சொல்ல வருகிறீர்களா’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர்கள் யாரும் பதில் அளிக்காமல் சென்றனர்.