ministers meeting with sasikala dinakaran

சசிகலா குடும்பத்தை முற்றிலுமாக அரசியலை விட்டு ஒதுக்கினால் மட்டுமே, ஆட்சிக்கு ஆபத்து வராது என்பதை அறிந்தே, அவர்களை அரசியலை விட்டு ஒதுக்கி விட்டதாக அமைச்சர்கள் அறிவித்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால், சசிகலா குடும்பத்தினர், கட்சியிலும், ஆட்சியிலும் இன்னும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் நீக்கத்தை அதிகார பூர்வமாக அறிவித்தால் மட்டுமே, அணிகள் இணைப்பு குறித்து பேச முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறார் பன்னீர்.

ஆனால், சசிகலா குடும்பத்தை நீக்கி விட்டோம் என்று எடப்பாடி தரப்பினர் கூறி வந்தாலும், அமைச்சர்கள் சிலரும், எம்.எல்.ஏக்களும், சசிகலாவையும், தினகரனையும் அடிக்கடி சந்தித்து பேசி வருவது எடப்பாடிக்கு கடும் நெருக்கடியை உருவாக்கி உள்ளது.

சில நாட்களுக்கு முன்னர், திகார் சிறையில் உள்ள தினகரனை, அவரது தீவிர ஆதரவாளர்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட சில எம்.எல்.ஏ க்கள் சந்தித்து பேசினர்.

சசிகலாவே இன்னும் கட்சியின் பொது செயலாளராக இருக்கிறார். தினகரனே துணை பொது செயலாளராக இருக்கிறார். அவர்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது, எப்படி சந்தித்து பேசாமல் இருக்க முடியும்? என்று, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட எம்.எல்.ஏ க்கள் கூறினார்.

இந்நிலையில், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, எம்.எல்.ஏ க்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், கருணாஸ் ஆகியோர், அண்மையில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசி இருக்கின்றனர்.

இது எடப்பாடிக்கு, அரசியல் ரீதியாக நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதனால்,டெல்லியின் கோபத்திற்கு ஆளான எடப்பாடி, பன்னீர் கூறிவரும் குற்றச்சாட்டை மறுக்க முடியாத நிலைக்கும் ஆளாகி உள்ளார்.

சட்டமன்ற கூட்ட தொடரை, அவசரப்பட்டு முடித்து விட்டதாக திமுக குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், அமைச்சரும், எம்.எல்.ஏ க்களும், சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசி இருப்பது, முதல்வர் எடப்பாடியை சிக்கலுக்கு உள்ளாக்கி இருக்கிறது.

சசிகலா மற்றும் தினகரனை அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்கள் சந்தித்திருப்பது குறித்து பன்னீரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அணிகள் இணைப்பு விவகாரமும் பின்னடைவை சந்திக்கும் என்று அஞ்சுகிறார் எடப்பாடி.

இதனால், நாம் யாருக்கு என்ன கெடுதல் செய்தோம், நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? என்று தமக்கு நெருக்கமானவர்களிடம் முதல்வர் எடப்பாடி புலம்பி வருவதாக கூறப்படுகிறது.