தமிழகம் முழுவதும் மழை வேண்டி யாகம் வளர்க்கணும் … அமைச்சர்கள், தொண்டர்களுக்கு இபிஎஸ் – ஓபிஎஸ் உத்தரவு !!
குடிநீர் பிரச்னை தொடர்பாக தமிழகம் முழுவதும் திமுக நாளை போராட்டம் நடத்தவுள்ள நிலையில், மழை வேண்டி யாகம் வளர்க்க அதிமுகவினருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் தண்ணீர் பஞ்சத்தால் பொது மக்கள் வீட்டை கால் செய்து தங்கள் சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
பல தனியார் பள்ளிகள் தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய பணிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் தண்ணீர் பஞ்சத்தை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மழை வேண்டி தொண்டர்கள் யாகம் வளர்க்க வேண்டும் என முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், மழை வேண்டி அனைத்து அமைச்சர்களும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கோவில்களில் நாளை யாகம் வளர்த்து பூஜை நடத்த வேண்டும்.
இந்த யாகத்தில், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும் அந்த அறிவிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.