minister vijayabaskar opinion about symbol recovery

நீண்ட இழுபறிக்குப் பிறகு இரட்டை இலை சின்னத்தை முதல்வர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து கட்சியின் கொடி, கட்சியின் பெயர் என அதிமுக தொடர்பான அனைத்தையும் ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் பயன்படுத்தலாம். இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்-இபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டது, தினகரன் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டை இலை சின்னத்தை பெற்றதன் மூலம் அமைச்சர்களும் கட்சியின் நிர்வாகிகளும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதை நினைத்து இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதற்கு முன்னதாக 1989ம் ஆண்டு ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டு செயல்பட்டபோது, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. பின்னர் ஜெயலலிதா அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இரட்டை இலையை பெற்றது தொடர்பாக அமைச்சர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இரண்டாவது முறையாக இரட்டை இலையை மீட்டு அதிமுக வரலாற்று சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மட்டுமல்லாது இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில், அதிமுக தான் வெற்றிபெறும் எனவும் அழிக்க முடியாத சக்தியாக அதிமுக திகழ்வதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.