சும்மா வாய்க்கு வந்த படியேல்லாம் பேசாதீங்க.. எடப்பாடியாருக்கு எதிராக எகிறிய அமைச்சர் செந்தில் பாலாஜி..!
இது சம்பந்தமாக குற்றம்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவருடைய தொகுதிகளில் உள்ள எத்தனை ரேஷன் கடைகளுக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் மக்கள் யாராவது பொங்கல் பரிசு பொருட்கள் தரம் இல்லை என புகார் சொன்னார்களா?
ரேசனில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமாகத்தான் வழங்கப்படுகின்றன என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி;- பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு பொருட்கள் முழுமையாக கிடைப்பதில்லை. பல்வேறு நியாயவிலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பை எடுத்து செல்ல பைகள் வழங்கப்பவில்லை. பொருட்கள் எடை குறைவாக இருப்பதால் ரேஷன் ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.
திருவண்ணாமலையில் 2.5 டன் வெல்லத்தை பயன்படுத்த உகந்ததல்ல என ஆட்சியர் நிறுத்தி வைத்துள்ளார். அதேபோல், ஓமலூரில் ரேஷன் கடையில் தரமற்ற வெல்லம் கொடுத்திருக்கிறார்கள். இதைப் பயன்படுத்தி பொதுமக்கள் எப்படி பொங்கல் வைக்கமுடியும். புளியில் பல்லி இருந்ததாகச் செய்தி வெளியானது. பொங்கல் தொகுப்பு பொருட்கள் நெகிழியில் அடைக்கப்பட்டு தான் கொடுக்கப்படுகின்றன.
பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் திமுக அரசு கொள்ளையடித்தது தான் மிச்சம். பொங்கல் தொகுப்புக்காக வட மாநிலங்களில் இருந்து தரமற்ற பொருட்களை வாங்கி விநியோகம் செய்கின்றனர். அதிக கமிஷன் கிடைப்பதால் வட மாநிலங்களில் இருந்து பொங்கல் தொகுப்பு பொருட்களை வாங்குகின்றனர். பொங்கல் தொகுப்புக்கான கரும்பு கொள்முதலில் கரும்பு ஒன்றுக்கு ரூ.15 வரை ஊழல் செய்துள்ளனர். பொங்கல் தொகுப்புக்கான துணிப்பை ஒன்றில் ரூ.30 வரை ஊழல் நடைபெற்றுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இவரது குற்றச்சாட்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
கோவையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி;- முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி அனைத்து பொங்கல் பரிசு பொருட்களும் தரமான முறையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக குற்றம்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவருடைய தொகுதிகளில் உள்ள எத்தனை ரேஷன் கடைகளுக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் மக்கள் யாராவது பொங்கல் பரிசு பொருட்கள் தரம் இல்லை என புகார் சொன்னார்களா? என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.