எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டையில் கை வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி.. அதிமுகவை கொஞ்ச கொஞ்சமாக கரைக்க முடிவு.
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது மிகப்பெரிய இயக்கம். எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதா அவர்களால் வளர்க்கப்பட்ட அந்த கட்சியை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு நபர்கள் தங்களின் சுயநலத்திற்காக கட்சியை நான்கு மாவட்ட கட்சியாக பிரித்துவிட்டார்கள்.
சேலம் எடப்பாடி தொகுதி பொறுப்பாளர் செல்லதுரை தலைமையில் அதிமுகவைச் சேர்ந்த 28 பேர் அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், திமுகவில் ஏற்பட்டுள்ள இரட்டை தலைமை கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்துள்ள சசிகலா, அதிமுகவை கைப்பற்றும் பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதிமுகவின் முக்கிய பிரமுகர்களை தொலைபேசியில் அழைத்து பேசி அதற்கான ஆடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். இது ஒருவகையில் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடுவோரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் நடவடிக்கைகளில் ஓபிஎஸ், இபிஎஸ் ஈடுபட்டுவருகின்றனர்.
அதேவேளையில், தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவதாக அதிமுகவில் புதிய கலகக் குரல் எழுந்துள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் இடையே ஏற்படும் மோதல்கள் கட்சியை கலகலக்க வைத்துள்ளது. இந்நிலையில் அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்த பலருக்கு, அக்காட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அதிமுகவில் இருந்து பலரும் வெளியேறி, திமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர். சமீபத்தில் அமமுகவிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாக கருதப்படும் சேலம் மற்றும் அதை ஒட்டியுள்ள கொங்கு மண்டலத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களை தூக்க அமைச்சர் செந்தில் பாலாஜி ஆபரேஷனை துவங்கியுள்ளார். அந்த வகையில்,சேலம் எடப்பாடி தொகுதி பொறுப்பாளர் செல்லதுரை தலைமையில் அதிமுகவைச் சேர்ந்த 28 பேர் அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.
இந்நிகழ்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செல்லதுரை,தமிழக முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளோம். மேலும் இதற்கு வாய்ப்பளித்த முதலமைச்சர் அவர்களுக்கும் மற்றும் அமைச்சர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது மிகப்பெரிய இயக்கம். எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதா அவர்களால் வளர்க்கப்பட்ட அந்த கட்சியை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு நபர்கள் தங்களின் சுயநலத்திற்காக கட்சியை நான்கு மாவட்ட கட்சியாக பிரித்துவிட்டார்கள். மேலும் வரும் காலத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது கரைந்து போய்விடும் என்று கூறினார்.