அதிமுக எந்த தேர்தலை கண்டும் பயந்ததில்லை - தெனாவட்டு காட்டும் அமைச்சர் செல்லூர் ராஜூ...
உள்ளாட்சி தேர்தலை நவம்பர் 17 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதிமுக எந்த தேர்தலை கண்டும் பயந்ததில்லை எனவும், இரட்டை இலை சின்னத்துடன் தான் தேர்தலை சந்திப்போம் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் ஆட்சி முடிந்தது. இதையடுத்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் இரு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதில் முறைக்கேடு நடந்ததாக திமுக சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது. மேலும், ஏப்ரல் மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியது.
ஆனால் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி முடியவில்லை எனவும், அனைத்து பணிகளும் முடிந்தவுடன் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் அணையம் தெரிவித்தது.
இதைதொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சி தேர்தல் குறித்த இறுதி தீர்ப்பு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி தலைமையில் வெளியானது. அதில், நவம்பர் 17 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என அதிரடியாக உத்தரவிட பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக எந்த தேர்தலை கண்டும் பயந்ததில்லை எனவும், இரட்டை இலை சின்னத்துடன் தான் தேர்தலை சந்திப்போம் எனவும் தெரிவித்தார்.