சும்மா எங்க நேரத்தை வீணடிக்காதீங்க... எஸ்.பி.வேலுமணிக்கு நீதிமன்றம் கண்டனம்!
அறப்போர் இயக்கத்துக்கு எதிரான அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அறப்போர் இயக்கத்துக்கு எதிரான அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணையில் உள்ளது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சூழ்நிலையில் இந்த வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது என்று கூறி, வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், இந்த வழக்கு நிலுவையில் இருப்பதை அமைச்சருக்கு எதிர்மறையானதாக கருதக் கூடாது எனவும் தெரிவித்திருந்தனர்.
இந்த உத்தரவை மீறி, அறப்போர் இயக்கத்தினர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனக்கு எதிராக அவதூறு பரப்புவதாக அமைச்சர் வேலுமணி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு வந்தபோது, அரசியல் உள்நோக்கத்துடன் அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எஸ்.பி.வேலுமணி வழக்கு தொடர்ந்துள்ளதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக கூறிய நீதிபதிகள், அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பேசவோ அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடவோ நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை எனவும் தெளிவுபடுத்தினர். இதைத்தொடர்ந்து, எஸ்.பி.வேலுமணிக்கு நீதிபதிகள் 10 ரூபாய் அபராதம் விதித்தனர். பின்னர், எஸ்.பி.வேலுமணி தரப்பில் கோரிக்கை வைத்ததையடுத்து அபராத உத்தரவை திரும்ப பெற்று வழக்கை தள்ளுபடி செய்தனர்.