அவருக்கு வெள்ளை மனமே இல்லை... அதனால்தான் வெள்ளை அறிக்கை கேட்கிறார்... மு.க. ஸ்டாலினை கலாய்த்த ஆர்.பி. உதயகுமார்!
அதிமுக அரசு எந்த சாதனைகளை செய்தாலும் மு.க. ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்டுகொண்டே இருப்பார். திமுக ஆட்சியில் இருந்தபோது இதுபோன்ற தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்பை தமிழகம் இழந்துவிட்டது.
எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளை மனம் இல்லாததால் எங்களிடம் வெள்ளை அறிக்கை கேட்கிறார் என்று தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சிகள் இன்று அஞ்சலி செலுத்தின. அதிமுக சார்பில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “தற்போது முதல்வர் பழனிச்சாமி மேற்கொண்ட வெளி நாட்டுப் பயணம் மூலம் முதல் கட்டமாக 8,300 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இந்த வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியையும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்த முடியும்.
எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளை மனம் இல்லாததால் எங்களிடம் வெள்ளை அறிக்கை கேட்கிறார். அதிமுக அரசின் சாதனைகளை திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதிமுக அரசு எந்த சாதனைகளை செய்தாலும் மு.க. ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்டுகொண்டே இருப்பார். திமுக ஆட்சியில் இருந்தபோது இதுபோன்ற தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்பை தமிழகம் இழந்துவிட்டது. இனி திமுகவின் எந்த மாயத் தோற்றமும் தமிழக மக்களிடம் எடுபடாது" என்று உதயகுமார் தெரிவித்தார்.