திடீர் விசிட்... இணை ஆணையரை சுளுக்கெடுத்த அமைச்சர்... வெலவெலத்துப் போன ஊழியர்கள்...!
அதுமட்டுமல்லாமல் மதுரை தங்கராஜ் சாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் மூர்த்தி திடீரென விசிட் அடித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அமைச்சரவை முதல் நாளில் இருந்தே தீயாய் வேலை செய்து வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளில் மட்டுமல்லாது, காய்கறி விலை உயர்வு, பால் தட்டுப்பாடு, மின் விநியோகம், தூர்வாரும் பணிகள், கோயில் சொத்துக்கள் மீட்பு என அடுத்தடுத்து தங்களது துறை சார்ந்த அதிரடி ஆய்வுகளை அமைச்சர்கள் நடத்தி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது துறை சார்ந்து பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அப்படித்தான் மதுரையில் நிலுவையில் உள்ள வணிக வரியை விரைந்து வசூலிக்கும் படி அதிகாரிகளுக்கு அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் மதுரை தங்கராஜ் சாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் மூர்த்தி திடீரென விசிட் அடித்துள்ளார்.
கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு 30 சதவீத பணியாளர்கள் மட்டுமே அலுவலகத்தில் வேலை பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்படியிருந்தும் அமைச்சர் ஆய்வு நடத்திய அலுவலக வேலை நேரமான 10 மணிக்கு கூட சொற்ப அளவிலான ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர். மீதமிருந்த பெரும்பாலான ஊழியர்கள் காலதாமதமாகவே பணிக்கு வந்துள்ளனர். இதனை கண்காணித்த அமைச்சர் வணிக வரித்துறை இணை ஆணையரை வெளுத்து வாங்கியுள்ளார்.
வழக்கமாகவே இப்படித்தான் எல்லாரும் லேட்டாக வேலைக்கு வருவார்களா? என இணை ஆணையரிடம் கேள்வி எழுப்பிய அமைச்சர், கால தாமதமாக பணிக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். அங்கிருந்து புறப்பட்ட அமைச்சர் மூர்த்தி தொடர்ந்து மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு வளாகத்தில் உள்ள வடக்கு மாவட்ட பதிவாளர் அலுவலகம், ஒத்தக்கடை, தல்லாகுளம், சொக்கிகுளம், தெப்பக்குளம் சார்பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். மேலும் பத்திர எழுத்தர்கள், பதிவாளர்கள் இடையே இடைத்தரகர்களை பயன்படுத்தக் கூடாது. லஞ்சம் மற்றும் இடைத்தரகர்கள் தலையீடு இருந்தால் துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.