தமிழகத்தில் புதிதாக 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய தகவல்
மருத்துவக்கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் விரைவில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட இருப்பதாக கூறியுள்ளார்.
முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை
சென்னை மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர் வரவேற்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான பாட புத்தகத்தை அமைச்சர் வெளியிட்டு ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதையடுத்து சென்னை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கியினை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வழங்கி உரையாற்றினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் 2-வது தொடங்கப்பட்ட மருத்துவக்கல்லூரி சென்னை மருத்துவக்கல்லூரி. 1835-ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த மருத்துவக்கல்லூரி. இது வரலாற்று சிறப்புமிக்க கல்லூரி. இந்த மருத்துவமனையின் வயது 300 ஆண்டுகளுக்கு மேலானது. இந்த மருத்துவமனை இந்தியாவின் பழமை வாய்ந்த மருத்துவமனையில் முதலிடத்தில் உள்ளதாக கூறினார்.
அரசு பள்ளி மாணவர்கள் 565 பேர் தேர்வு
இந்த கல்லூரியில் பயின்றவர்கள் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருது பெற்று உலக அளவில் புகழ்பெற்ற மருத்துவர்களாக உள்ளனர். பேராசிரியர் மருத்துவர் சாரதா, டி.எஸ்.கனகா, அடையாறு புற்றுநோய் நிபுணர் மருத்துவர் வி.சாந்தா, நீரழிவு நோய் பாதிப்பை உலகறிய செய்த ஷேசையா உள்ளிட்ட புகழ்பெற்ற மருத்துவர்கள் இந்த மருத்துவக்கல்லூரியில் பயின்றவர்கள் என குறிப்பிட்டார். தமிழக முதல்வர் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளில் மருத்துவத்துறையை மேம்படுத்தி வருகிறார். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீட்டை உறுதி செய்தவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என கூறினார். அரசு பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு மட்டும் எம்.பி.பி.எஸ். 459, பல் மருத்துவம் 106 என மொத்தம் 565 பேர் தேர்வாகி உள்ளதாக தெரிவித்தார்.
6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவக்கல்லூரி உள்ளது. தமிழகத்தில் அரசியல் மற்றும் தனியார் இடம் என ஒட்டுமொத்தமாக 71 மருத்துவக்கல்லூரி உள்ளன. தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரியில் அமைக்க அனுமதி கோர இருப்பதாக குறிப்பிட்டார். அதற்கான முயற்சியில் தமிழக முதல்வர் ஈடுபட்டு வருகிறார். அங்கேயும் மருத்துவக்கல்லூரி அனுமதிக்கப்பட்டால் இந்தியாவிலேயே அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக்கல்லூரி உள்ள மாநிலமாக தமிழகம் மாறும் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
இபிஎஸ் உடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா..? ஸ்டாலினுக்கு சவால் விடும் எஸ் பி வேலுமணி