அம்மா மினி கிளினிக்..தமிழகம் முழுவதும் மூடல்.. அதிரடி காட்டிய திமுக..
அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாகவே ஏற்படுத்தப்பட்டதாகவும், அவற்றின் மூலம் எந்த பயனும் இல்லை எனவும் தெரிவித்து இருக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தமிழகத்தில் தற்போது 50க்கும் மேற்பட்ட பாதிப்புகளை பதிவு செய்திருக்கும் ஒமிக்ரான் வைரஸின் தாக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த ஒரு சில வாரங்களாக தமிழகம் முழுவதும் கொரோனா பரவலின் பாதிப்புகள் உயர்ந்து வரும் சூழலில், ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் அளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், ‘சென்னையில் தற்போது கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், அதற்கேற்ற ஆலோசனைகளை வழங்க சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸின் பாதிப்புகள் பெரிதளவு இல்லாத பட்சத்தில் மக்கள் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த தனிமைப்படுத்தல் காலம் முடிந்த பிறகு 2 முறை கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் முடிவுகள் வந்திருப்பின் காத்திருப்பை முடித்து கொள்ளலாம். அதே நேரத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவு காணப்படும் கோவை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களிலும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
இதுவரை தமிழகம் முழுவதும் தற்காலிகமாக செயல்பட்டு வந்த 2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளன. இந்த கிளினிக்களில் தற்போது சிகிச்சை கொடுக்கப்படவில்லை. அதனால் இதுவரை அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றி வந்த 1,800 மருத்துவர்களுக்கு விரைவில் மாற்றுப்பணியிடம் வழங்கப்படும். இது தவிர சென்னை வேப்பேரி பெரியார் திடலில், கொரோனா சிறப்பு சிகிச்சைக்காக சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 1,820 மருத்துவர்கள் கொரோனா சிகிச்சையை மேற்கொள்வதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை மாநகராட்சியில் மட்டும் 22 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரே நாளில் மட்டும் 3.35 லட்சம் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.