வைகோ அண்ணன் பிறக்கும்போதே லவுடு ஸ்பீக்கரோடு தான் பிறந்தாரு.. கலகலத்த அமைச்சர் ஜெயக்குமார்
வீரவசனம் பேசும் பழக்கம் வைகோவுடன் கூடவே பிறந்தது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அனுமதியில்லாமல் மலையேற்றம் சென்றதே காட்டுத்தீயால் ஏற்பட்ட துயர சம்பவத்திற்கு காரணம். இனிமேல், மலையேற்றம் முறைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்றார்.
உங்களை வீரவசனம் பேசக்கூடாது என வைகோ விமர்சித்துள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களின் விமர்சனங்களுக்கும் கட்சி சார்பிலும் அரசு சார்பிலும் நான் பதிலளிக்கிறேனே தவிர வீரவசனம் எல்லாம் பேசவில்லை. வீரவசனம் பேசுவது எல்லாம் வைகோ அண்ணனுக்குத்தான் கைவந்த கலை. பிறக்கும்போதே லவுடு ஸ்பீக்கருடன் பிறந்தவர் வைகோ என ஜெயக்குமார் பதிலளித்தார்.