minister jayakumar opinion about upcoming verdict on mla disqualification case

தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு, இன்று பிற்பகல் 1 மணிக்கு வர உள்ள நிலையில், நல்லதே நடக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிராக நடந்துகொண்டதால் அவர்களை தகுதிநீக்கம் செய்யுமாறு அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் பரிந்துரைத்தார்.

இதையடுத்து இதுதொடர்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர்களில் ஜக்கையன் மட்டும் சபாநாயகரிடம் விளக்கம் அளித்தார். மற்றவர்கள் விளக்கம் அளிக்காததால், தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். 

தகுதிநீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அமர்வு, இன்று பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. 

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான தீர்ப்பு என்பதால், தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மக்களும் இந்த தீர்ப்பை எதிர்நோக்குகின்றனர். இன்று தீர்ப்பு வரவிருப்பதை அடுத்து, தீர்ப்புக்கு பிறகான அரசியல் நகர்வுகள், நடவடிக்கைகள் குறித்து மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு தீர்ப்பு வரவிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, நல்லதே நடக்கும் என்று இரண்டே வார்த்தையில் மட்டுமே பதிலளித்தார்.