அம்மா இருக்கும் போது இப்படி பேசிவிட்டு நடமாடி இருக்க முடியுமா? ரஜினிக்கு எச்சரிக்கை விட்ட ஜெயக்குமார்
ரஜினியின் பேச்சு அவரது அரசியல் முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது என அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி திரைத்துறையில் பல்வேறு பரிணாமங்களில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியவர். இன்று கொண்டாடப்படும் பல பழந்தமிழ் நடிகர்களின் படங்களுக்கும் இவர் வசனம் எழுதி இருக்கிறார்.
உணர்ச்சி பொங்கும் இவரது தமிழ் வசனங்களுக்கு எண்ணிலடங்கா தமிழ் ரசிகர்கள் இன்னமும் இருக்கின்றனர். அப்படி பட்ட கலைஞரின் மறைவு அரசியலுக்கு மட்டுமல்ல திரைத்துறைக்கும் தான் பேரிழப்பு.எனவே கலைஞரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நேற்று திரைத்துறையினர் ஒரு இரங்கல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த இரங்கல் கூட்டத்தில் தமிழ் திரைத்துறையை சார்ந்த பல்வேறு நடிகர் , நடிகைகள், தயாரிப்பாளர்கள் , இயக்குனர்கள் , இசையமைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த கூட்டத்திற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் வருகை புரிந்திருந்தார். அப்போது கலைஞர் கூறித்து பேசிய ரஜினி மிகவும் உணர்ச்சி வசப்பட்டு காணப்பட்டார்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக தலைவராக கலைஞர் தமிழகத்துக்காக பாடுபட்டதை குறித்து புகழ்ந்து பேசிய அவர், அதிமுக உருவாக காரணமே கலைஞர் தான் என்றும் கூறினார். அதிமுக தலைவர்களின் புகைப்படம் வைத்திருக்கும் இடத்தில் கலைஞரின் படத்தையும் அவர்கள் வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் மெரினாவில் கலைஞருக்கு இடம் மறுக்கப்பட்ட போது, தான் மிகவும் வருந்தியதாகவும், நீதிமன்ற தீர்ப்பின் மூலம் இடம் கிடைக்காமல் போயிருந்தால், நானே முன்வந்து போராடி பெற்று தந்திருப்பேன் என்றும் ரஜினி அந்த கூட்டத்தின் போது பேசினார். மேலும் அவர் கலைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் வரவேண்டாமா? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். அவரது இந்த கேள்வி அதிமுகவினர் இடையே கடும் கோபத்தை கிளப்பி இருக்கிறது. ரஜினியின் இந்த கேள்விக்கு அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பதிலளித்திருக்கிறார்.
அதில் எம்.ஜி.ஆரும் , ஜெயலலிதாவும் இருக்கும் போது இப்படி பேசிவிட்டு ரஜினிகாந்த் நடமாடி இருக்க முடியுமா ? திமுக தொண்டர்களை தன்பக்கம் இழுக்கவே ரஜினிகாந்த் அதிமுகவை விமர்சிக்கிறார், மறைந்த தலைவருக்கு கொடுக்க வேண்டிய அனைத்து மரியாதைகளையும் தமிழக அரசு கொடுத்தது
நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினி பேசியது அரசியல் முதிர்ச்சி இல்லை என்பதை காட்டுகிறது ஷூட்டிங்கும், மீட்டிங்கும் ஒன்றாகிவிடாது;ரஜினிக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை என்று காட்டமாக தெரிவித்திருக்கிறார் ஜெயக்குமார்.