இந்தியாவின் 68வது ஆண்டு குடியரசு தினவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசு பள்ளிகள், அலுவலகங்கள், விடுதிகள் அனைத்திலும் தேசியகொடியேற்றி, சிறப்பாக கொண்டாடினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையொட்டி, கொடியேற்றப்படும் தளம் மற்றும் அதனை சுற்றியுள்ள அலுவலக வளாகத்தில் வண்ண கோலமிட்டு, பல்வேறு உருவங்கள் வரைந்து மாணவ, மாணவிகள் அசத்தி இருந்தனர். மேலும், குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், குடியரசு தினவிழாவில் அமைச்சர்கள், அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள் வர வழைக்கப்படுவதால், அவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனை அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஈரோடு வ.உ.சி. விளையாடு அரங்க வளாகத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவிகள் விளையாட்டு விடுதி உள்ளது. இங்கு 101 மாணவிகள் தங்கி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்றனர். இங்குள்ள மாணவிகள், குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகளை நேற்று முன்தினம் இரவு செய்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணிக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், திடீரென மாணவிகளின் விடுதிக்கு சென்றார். அப்போது, அங்கிருந்த மாணவிகள் நைட்டி மற்றும் சாதாரண உடையில் இருந்துள்ளனர்.

அப்போது, மாணவிகள் விடுதிக்கு சென்ற அமைச்சர், குடியரசு தின விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பின்னர், மாணவகளிடம், `தேசிய அளவிலான போட்டிகளில் அதிகளவில் பங்கேற்று பதக்கங்களை பெற வேண்டும்’ என கூறியுள்ளார். அப்போது, அவருடன்அமைச்சர் கே.சி.கருப்பணன், கலெக்டர் பிரபாகர் உட்பட பலர் இருந்தனர்.

அமைச்சர் திடீரென ஆய்வு செய்ய வந்ததை விடுதி நிர்வாகிகள், மாணவிகளிடம் கூறியுள்ளார். மேலும், குடியரசு தின விழாவில், தாங்கள் பங்கு கொள்ளும் கலை நிகழ்ச்சிகள் பற்றி கூறும்படி தெரிவித்துள்ளார். ஆனால் மாணவிகள் அனைவரும் நைட்டி மற்றும் சாதாரண உடையில் இருந்ததால், அமைச்சர் வரும்போது, அங்கு செல்வதற்கு தயக்கம் காட்டினர்.

கடந்த ஆட்சியின் போது, அமைச்சராக இருந்த சுந்தர்ராஜன் நள்ளிரவில் மாணவிகள் விடுதியில் ஆய்வு நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது சத்தியமங்கலத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் அமைச்சர், நேரம் இருந்தால் விடுதிக்கு வருதாக கூறப்பட்டு இருந்தது. அதேபோல், அமைச்சர் வருவதாக கடைசி நேரத்தில் உறுதியானது.

மேற்கண்ட விடுதி மாணவிகள் இரவு 11 மணிக்குமேல்தான் தூங்க செல்வார்கள். அதனல், அமைச்சர் வருவது பற்றியோ, தூங்கி கொண்டிருந்த மாணவிகளையோ நாங்கள் கூறவில்லை. ஆனால், திடீரென அமைச்சர் வந்ததும், மாணவிகளுக்கு தயக்கம் ஏற்பட்டது என்றார்.