திருவண்ணாமலை டூ கள்ளக்குறிச்சி மற்றும் திருச்சி வழியாக மணலூர்பேட்டைக்கு பேருந்து இயக்கத்தை துவங்கிய வைத்த அமைச்சர் எ.வ.வேலு, அந்த பேருந்தை தானே ஓட்டி பார்த்த சம்பவம்  தற்போது வைரலாகி வருகிறது. 

திருவண்ணாமலையிலிருந்து மணலூர்பேட்டை வழியாக திருச்சிக்கும், திருவண்ணாமலையிலிருந்து மணலூர்பேட்டை வழியாக கள்ளக்குறிச்சிக்கும், புதிய வழிதடத்தில் பேருந்து இயக்க வேண்டும் என்றும் மணலூர் பேட்டை மக்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று இந்த இரு வழிதடங்கள் வழியாக அரசு பேருந்து துவங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, புதிய வழிதடத்தில் பேருந்தை இயக்கி வைத்ததோடு, தானே அப்பேருந்தை ஓட்டி பார்த்தார். அமைச்சரின் இந்த செயல், அப்பகுதி மக்கள் மற்றும் கூடியிருந்த தொண்டர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு , கிராமங்களை எல்லாம் நகரங்களாக மாற்ற வேண்டும் என்பதே தமிழக முதலமைச்சரின் கனவு என தெரிவித்தார். மேலும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற சிறப்பு திட்டத்தையும் முதலமைச்சர் அறிவித்தார் என்று புகழாரம் சூட்டினார்.

இதனையடுத்து, இரண்டு புதிய வழித்தட பேருந்துகளை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்து தொடர்ந்து பேருந்தில் ஏறி சிறிது தூரத்திற்கு பேருந்தை இயக்கி பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களை உற்சாக படுத்தினார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், போக்குவரத்துத்துறை அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

முதலில் அதிமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அமைச்சர் எ.வ.வேலு, பின்னர் திமுக வில் தன்னை இணைத்து கொண்டார். எல்லோரும் ஏவினால்தான் வேலை பார்ப்பார்கள். ஆனால், இவர் யாரும் ஏவாமலேயே எனக்காக வேலை பார்ப்பதால்தான் எ.வ.வேலு என்று பொருத்தமான பெயருடன் இருக்கிறார் என்று கருணாநிதியால் பாராட்டப்பட்டவர். 2006 - 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உணவு துறை அமைச்சராக இருந்தவர். மேலும் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டத்திலுள்ள குடலூர் கிராமத்தில்,பிறந்த இவர், தமிழ் இலக்கியத்தில் பட்டம்பெற்றுள்ளார். இவர் ஆரம்பகாலங்களில் பேருந்து நடத்துநராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது திருவண்ணாமலையில் அருணை பொறியியல் மற்றும் கலை கல்லூரி, கம்பன் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளின் அதிபராக உள்ளார்.