துபாயில் நடைபெற்று வரும் நிறைவு நாள் கண்காட்சியில் கலந்து கொள்ள துபாய் புறப்பட்ட அமைச்சர் துரைமுருகன் நெஞ்சு வலி காரணமாக புறப்பட தயாராக இருந்த விமானத்தில் இருந்து அவரசமாக வெளியேறினார். 

முதலமைச்சர் துபாய் பயணம்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாயில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து துபாய் தொழிலதிபர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியவர், தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து தமிழகத்தில் தொழில் தொடங்க லூலூ நிறுவனத்தோடு 3500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமும் மேற்கொண்டார். தனது துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து இரண்டு நாள் அரசு முறை பயணமாக துபாய் செல்ல தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டமிட்டிருந்தார். அங்கு தமிழக அரசு சார்பாக நடைபெறவுள்ள கருந்தரங்கில் கலந்துக்கொள்ள திட்டமிட்டிருந்தார். 

துரைமுருகனுக்கு அனுமதி மறுப்பு

 இன்று காலை 9.30 மணி விமானத்திற்கு காலை 7.50 மணிக்கே அமைச்சர் துரைமுருகன் சென்னை விமான நிலையம் வந்துள்ளார். பாஸ்போர்ட் மற்றும் விசா சரிபார்க்கப்பட்டது. அப்போது விசாவில் பழைய பாஸ்போர்ட் எண் குறிப்பிடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் விமானத்தில் துபாய் செல்ல குடியுரிமை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர் . இதனால் துபாய் பயணம் செய்ய முடியாமல் துரை முருகன் வீடு திரும்பினார். இதனையடுத்து விசாவில் உள்ள பழைய பாஸ்போர்ட் எண் மாற்றப்பட்டு இன்று மாலை துபாய் செல்ல டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து மாலை 4 .30 மணியளவில் விமான நிலையத்திற்கு துரை முருகன் வந்திருந்த நிலையில் விமான நிலைய அதிகாரிகளின் சோதனைகளுக்கு பிறகு விமானத்தில் ஏறி அமர்ந்தார். 

திடீர் நெஞ்சு வலி

சரியாக மாலை 6.40 மணிக்கு விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக துரைமுருகன் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் பைலட்டிடம் தகவலை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 15 நிமிடங்கள் விமானம் புறப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது. தொடர்ந்தும் நெஞ்சுவலி இருந்ததால் விமானத்தில் இருந்து கிழே இறங்கிய அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.