ராம மோகன் ராவ் அப்பட்டமாக பொய் சொல்கிறார்! அமைச்சர் சி.வி.சண்முகம்
மறைந்த ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச்செல்ல அமைச்சர்கள் ஆலோனை நடத்தியதாக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் கூறியதற்கு அமைச்சர் சி.வி. சண்முகம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர்களான, ராமமோகன் ராவ், ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேற்று ஆஜரானார்கள். அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.
விசாரணைக்கு பின் ராம மோகன் ராவ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆணையத்தில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் உண்மையாக பதிலளிததுள்ளதாக தெரிவித்தார்.
காவிரி விவகாரம் குறித்து அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடியே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாகவும் காவிரி விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை தந்ததாகவும் ராமமோகன் தெரிவித்தார்.
மேலும், ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க ஆலோசிக்கப்பட்டது என்றும் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாகவும் விசாரணை ஆணையத்தில் ராம மோகன் ராவ் கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில், ராம மோகன் ராவ் விசாரணை ஆணையத்தில் கூறியதாக வெளியான செய்தி குறித்து, அமைச்சர் சி.வி. சண்முகம், யாரையோ காப்பாற்ற இப்படி பொய் கூறுவதாக ராம மோகன் ராவ் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியளார்களிடம் பேசிய அவர், டிசம்பர் 5 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார். இவ்வளவு காலமாக வாய்முடி மவுனியாக இருந்த முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச்செல்ல ஆலோனை நடத்தியதாக கூறியுள்ளார். எனவே யார் யார் ஆலோசனை நடத்தினார்கள், யாரிடம் ஆலோசனை நடத்தினர், என்ன முடிவுகள் எடுக்கப்பட்டது. ஜெயலலிதாவை அழைத்துச்செல்ல யார் தடை விதித்தது. யாரையோ காப்பாற்ற இப்படி போய் கூறுவதாக சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.