விஜயகாந்த் பிஜேபி.,கிட்ட பேரம் பேசினது தெரியாதா..? சீண்டுகிறார் சி.வி.சண்முகம்!
பணம் இருக்கும் கட்சியிடம்தான் விஜயகாந்த் கூட்டணிக்கு பேரம் பேசுவார், அவர் பாஜக.,விடம் பேரம் பேசியது தெரியாதா என அமைச்சர் சி.வி.சண்முகம் விஜயகாந்தை விமர்சனம் செய்துள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அமைச்சர் சி.வி.சண்முகம். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் சண்முகம். அப்போது அவரிடம், முதல்வர் பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் நன்றாக நடித்து வருவதாக விஜயகாந்த் கூறியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் சண்முகம், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாஜக.,வுடன் பேரம் பேசியது தெரியாதா? பணம் இருந்தால் மட்டுமே விஜயகாந்த் பேசுவார்... இல்லாவிட்டால் வாயையே திறக்க மாட்டார் என விமர்சனம் செய்தார்.