தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?... அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய அதிரடி விளக்கம்...!
புதுச்சேரியில் ஜூலை 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேல்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாகவே மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், குறைந்தபட்சம் ஷிப்ட் அடிப்படையில் 2 மணி நேரமாவது பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த அனுமதிக்க வேண்டுமென தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதனிடையே புதுச்சேரியில் வரும் 16ம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக பள்ளிகளை திறக்க முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரியைப் போலவே தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுத்துள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: புதுச்சேரியில் ஜூலை 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, 9, 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெறும் என செய்திகள் வெளியாகியுள்ளது. புதுச்சேரியைப் போலவே தமிழகத்திலும் ஏன்? பள்ளிகளை திறக்க கூடாது என்பது தொடர்பாக நேற்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
புதுச்சேரியில் என்ன மாதிரியான வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றுகிறார்கள் என்பதையும், அதிகாரிகள் கூறும் கருத்துக்களையும் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கும் வழிமுறைகள் பின்பற்றப்படும் எனத் தெரிவித்தார்.
கடந்த வார நிலவரப்படி, தமிழகத்தில் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அரசு பள்ளியை நோக்கி வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களை தக்கவைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எப்போதுமே திமுக அரசின் நிலைப்பாடு நீட் தேர்வு வேண்டாம் என்பது தான். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக நீட் தேர்வுக்கான பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதே தமிழக அரசின் நோக்கம் என தெரிவித்தார்.