MGR Statue : இனியும் இதுமாதிரி தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.. எச்சரிக்கும் எடப்பாடியார்..!
ஏழை எளியோர் பசி தீர்த்த வள்ளல், தமிழக மக்கள் இதயங்களில் என்றென்றும் நீங்கா புகழ் கொண்டிருக்கும் இதயக்கனி எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலை தஞ்சை வடக்கு வீதியில் சமூக விரோதிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
தஞ்சை வடக்கு வீதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலை சமூக விரோதிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை வடக்கு வீதி சிரேஸ் சத்திரம் சந்திப்பில் 4 அடி உயர பீடத்தில் 2 அடி உயரத்தில் சிமெண்ட்டால் செய்யப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலை அமைக்கப்பட்டிருந்தது. இதன் அருகே தேநீர் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையை அதிகாலை திறக்க வந்த உரிமையாளர் எம்ஜிஆர் சிலை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இது தொடர்பாக போலீசாருக்கும், அதிமுகவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் எம்.ஜி.ஆர். சிலை பெயர்த்து பீடம் பின்புறம் தனியாக கிடந்ததது.
இதையடுத்து சிலையை மீட்டு மீண்டும் பீடத்தில் அதிமுகவினர் வைத்தனர். சிலை தேசப்படுத்தியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் மீது மிகக்கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்க இந்த அரசை கேட்டுக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஏழை எளியோர் பசி தீர்த்த வள்ளல், தமிழக மக்கள் இதயங்களில் என்றென்றும் நீங்கா புகழ் கொண்டிருக்கும் இதயக்கனி எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலை தஞ்சை வடக்கு வீதியில் சமூக விரோதிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
புரட்சித்தலைவர் அவர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், பொது அமைதியை சீர்குலைக்கவும் நினைப்போர் மீது மிகக்கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்க இந்த அரசை கேட்டுக் கொள்கிறேன். மேலும் இத்தகைய விஷமச்செயல்கள் இனியும் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.