நான் எம்.ஜி.ஆர். ரசிகன்; நூற்றாண்டு விழா எல்லாம் கொண்டாட முடியாது; கறாராக சொல்லும் கேப்டன்!
நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும், நான் எம்.ஜி.ஆர். ரசிகன், ஆனால் நூற்றாண்டு விழா எல்லாம் கொண்டாட மாட்டேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு, விஜயகாந்த், செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், புதிய ஆளுநரிடம் தமிழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்போதுதான் பதவியேற்றுள்ளார். எனவே பொறுத்திருந்து பார்ப்போம் என்றார். தமிழக பிரச்சனைகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் தெரிவித்ததாக கூறினார்.
டெங்கு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளேன் என்றார். உள்ளாட்சி தேர்தலின்போது, எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்று கூறினார்.
எம்.ஜி.ஆர். எனக்கு பிடித்த தலைவர். தேமுதிக சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா எல்லாம் கொண்டாட மாட்டேன் என்றார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்களை அழைத்து செல்வது தவறு என்றும் கூறினார். ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதாக இருந்தால் வரட்டும். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., நடிக்கிறார்கள்.
சிவாஜி மணிமண்டப விழாவுக்கு அழைப்பு விடுக்காததால் தான் பங்கேற்கவில்லை என்றும் மழைக்காலத்தில் வெள்ளத்தை எதிர்கொள்ள அரசு தயாராக இல்லை என்றும் விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.