சபாநாயகராகிறார் மேனகா காந்தி..? அமைச்சரவையிலிருந்து கழற்றிவிட்டப்பட்டது இதற்குதானா?
சபையில் நீண்ட காலம் அனுபவம் உள்ளவர்களை சபாநாயகராக நியமிப்பது வழக்கம். அதன் அடிப்படையில் 8 முறை நாடாளுமன்றமன்றத்துக்கு தேர்வாகியுள்ள மேனகா, சபாநாயகராக நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நரேந்திர மோடி அரசில் அமைச்சர் பதவி கிடைக்காத மேனகா காந்தி சபாநாயகர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. பிரதமராக இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் 57 அமைச்சர்களும் பதவியேற்றனர். கடந்த மோடி அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சராக மேனகா காந்தி நியமிக்கப்பட்டிருந்தார். இந்த முறையும் அவர் அமைச்சராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு முன்பு விபிசிங், வாஜ்பாய் அமைச்சரவையிலும் மத்திய அமைச்சராக செயல்பட்டிருக்கிறார்.
ஆனால், இந்த முறை மேனகா காந்தி மத்திய அமைச்சராக நியமிக்கப்படவில்லை. உத்தரப்பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட அவர், சபாநாயகராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சபையில் நீண்ட காலம் அனுபவம் உள்ளவர்களை சபாநாயகராக நியமிப்பது வழக்கம். அதன் அடிப்படையில் 8 முறை நாடாளுமன்றமன்றத்துக்கு தேர்வாகியுள்ள மேனகா, சபாநாயகராக நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபாநாயகர் பதவியை கருத்தில்கொண்டுதான் மேனகாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை மேனகா காந்தி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டால், மீராகுமார், சுமத்ரா மகாஜன் ஆகியோருக்கு பிறகு மூன்றாவது பெண் சபாநாயகர் என்ற பெயரை மேனகா காந்தி எடுப்பார். தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஒரு பெண் சபாநாயகராகப் பதவியேற்ற பெருமையும் கிடைக்கும்.