விவசாயிகளின் அதிரடி போராட்டம் !! மேலூர் பகுதி பாசனத்துக்கு கூடுதலாக 900 கனஅடி நீர் திறப்பு ….
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் அதிரடியாக போராட்டம் நடத்தியதையடுத்து இன்று காலை கள்ளந்திரி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் தண்ணீரை திறந்துவிட்டனர்.
மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 85,000 ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. கடந்தாண்டு மழை இல்லாததால் விவசாயம் கடுமையாக பாதிப்படைந்த நிலையில், இந்தாண்டும் தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள், விவசாயம் மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனால், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 5 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து முடங்கியது. மேலூரில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதையடுத்து, வைகை அணையில் இருந்து 7 நாட்களுக்கு 900 கன அடி தண்ணீர் வீதம் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். பெரியாறு பிரதான கால்வாய் வாயிலாக 700 கன அடி நீரும், திருமங்கலம் பிரதான கால்வாய் வாயிலாக 200 கன அடிநீரும் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து மதுரை மாவட்டம் வெள்ளையன்கிரி அருகே உள்ள பெரியாறு பிரதான கால்வாயில் இருந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று காலை தண்ணீர் திறந்துவிட்டார்.